சூரா 17: இஸ்ரவேலின்சந்ததியினர் (பனீ இஸ்ராயீல்)
[17:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[17:1] நம்முடைய அத்தாட்சிகளில் சிலவற்றை அவருக்குக் காட்டுவதற்காக, அதன் சுற்றுப் புறங்களை நாம் அருள்பாலித்திருந்த, அந்தத் தொலைவிலுள்ள சிரம்பணியும் இடத்திற்கு* (மக்காவின்) புனித மஸ்ஜிதிலிருந்து இரவுப் பொழுதில் தன் அடியாரை (முஹம்மது) வரவழைத்த அவர் துதிப்பிற்குரியவர். அவர் செவியேற்பவர், பார்ப்பவர்.
அடிகுறிப்பு

[17:2] அதுபோலவே, மோஸஸிற்கு நாம் வேதத்தைக் கொடுத்தோம், மேலும் இஸ்ரவேலின் சந்ததி யினருக்காக அதனை: “நீங்கள் என்னுடன் எந்த இணைத் தெய்வத்தையும் ஒரு இரட்சகராகவோ மேலும் எஜமானராகவோ அமைத்துக் கொள்ள வேண்டாம்” என்கின்ற ஒரு வழிகாட்டியாகவும் ஆக்கினோம்.
[17:3] அவர்கள் நோவாவோடு நாம் சுமந்து சென்றோரின் சந்ததியினர்; அவர் நன்றியுள்ள ஒரு அடியாராக இருந்தார்.
[17:4] நாம் வேதத்தில் இஸ்ரவேலின் சந்ததியினரிடம் தெரிவித்தோம்: “நீங்கள் பூமியில், இருமுறை மிகப்பெரும் அக்கிரமம் செய்வீர்கள். ஆண வத்தின் உயர் உச்சங்களில் வீழ்ந்திடவேண்டும் என்று நீங்கள் விதிக்கப்பட்டுள்ளீர்கள்.
[17:5] “முதல் முறை நிகழும் பொழுது, மிகவும் பலம் வாய்ந்த நம்முடைய பணியாட்களை உங்களுக் கெதிராக நாம் அனுப்புவோம் , அவர்கள் உங்களுடைய வீடுகள் மீது படையெடுப்பார்கள். இது நிகழ்ந்தே தீர வேண்டிய ஒரு முன்னறி விப்பாகும்.
[17:6] “அதன்பின்னர், நாம் அவர்கள் மீது உங்களுக்கொரு வாய்ப்புத் தருவோம், மேலும் எராளமாக செல்வங்களையும் மற்றும் பிள்ளை களையும் நாம் வழங்குவோம்; நாம் உங்களுக்கு மேன்மையைத் தருவோம்.
[17:7] “நீங்கள் நன்னெறிகளை செய்தால், உங்கள் சொந்த நலனுக்கே நீங்கள் நன்னெறிகளை செய்து கொள்கின்றீர்கள், ஆனால் நீங்கள் தீமைகள் செய்தால் உங்களுடைய சொந்த கேட்டிற்காகத் தான் அவ்வாறு நீங்கள் செய்கின்றீர்கள். இவ்விதமாக, இரண்டாவது முறை நிகழ்ந்தேறும் பொழுது, அவர்கள் உங்களைத் தோற்கடிப்பார்கள், மேலும் முதல் முறை அவர்கள் செய்ததைப் போலவே, மஸ்ஜிதில் நுழைவார்கள். நீங்கள் சேகரித்த இலாபங்கள் அனைத்தையும் அவர்கள் துடைத்தெடுத்து விடுவார்கள்.”
[17:8] உங்கள் இரட்சகர் உங்கள் மீது தன் கருணையைப் பொழிகின்றார். ஆனால் நீங்கள் வரம்பு மீறலுக்குத் திரும்பி விட்டால், தண்டனை யைக் கொண்டு நாம் எதிர்கொள்வோம். நம்பமறுப்பவர்களுக்கான இறுதித்தங்குமிடமாக ஜஹன்னாவை நாம் நியமித்திருக்கின்றோம்.

குர்ஆன்: மீட்சிக்கான நமது உபாயம்

[17:9] இந்தக் குர்ஆன் மிகச் சிறந்த பாதையை நோக்கி வழிநடத்துகின்றது, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்தும் நம்பிக்கையாளர் களுக்கு, அவர்கள் மகத்தானதொரு பிரதி பலனுக்கு தகுதியானவர்களாகி விட்டார்கள் என்ற நற்செய்தியைக் கொண்டு வருகின்றது.
[17:10] மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதோரைப் பொறுத்தவரை, வலிமிகுந்ததொரு தண்டனையை அவர்களுக்காக நாம் தயாரித்துள்ளோம்.
[17:11] ஏதோ ஒரு நன்மைக்காகப் பிரார்த்திப்பதாக எண்ணிக் கொண்டு, தனக்குத் தீங்கிழைக்கக் கூடிய ஏதேனும் ஒன்றிற்காக மனிதன் அடிக்கடி பிரார்த்திக்கின்றான். மனிதன் பொறுமையற்ற வனாக இருக்கின்றான்.
[17:12] இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக்கினோம். இரவை இருண்ட தாகவும், உங்களுடைய இரட்சகரிடமிருந்து வாழ்வாதாரங்களை நீங்கள் அதில் தேடிக் கொள்ளும் பொருட்டு பகலை பிரகாசமான தாகவும், நாம் ஆக்கினோம். இன்னும் உங்களுக்கு இது காலம் கணிக்கும் ஒரு வழிமுறையையும், கணக்கிடுவதற்கு ஓர் உபாயத்தையும் நிர்மாணிக்கின்றது. இவ் விதமாக நாம் ஒவ்வொன்றையும் விரிவாக விவரிக்கின்றோம்.

ஒளிநாடா *

[17:13] ஒவ்வொரு மனிதனின் விதியையும் நாம் பதிவு செய்திருக்கின்றோம்; அது அவன் கழுத்தில் கட்டப்பட்டுள்ளது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப் படும் நாள் அன்று அவன் அணுகக்கூடிய ஒரு பதிவேட்டை நாம் அவனிடம் கொடுப்போம்.
அடிகுறிப்பு

[17:14] உன் சொந்தப் பதிவேட்டைப் படி. இன்றைய தினம், உனக்குரிய கணக்காளனாக, நீயே போதுமானவன்.
[17:15] வழி நடத்தப்பட்டவரெல்லாம், தன் சொந்த நலனிற்காகவே வழிநடத்தப்படுகின்றார், மேலும் வழிதவறிச் செல்பவரெல்லாம் தன் சொந்த கேட்டிற்காகத்தான் அவ்வாறு செய்கின்றார். எந்தப் பாவியும் மற்றெவருடைய பாவத்தையும் சுமக்க மாட்டான்.முதலில் ஒரு தூதரை அனுப்பி வைக்காமல் ஒரு போதும் நாம் தண்டிப்பதில்லை.
[17:16] எந்தச் சமூகத்தையேனும் நாம் அழிப்பதாக இருந்தால், அதன் தலைவர்களை அங்கு ஏராளமான சீர்கேடுகளைச் செய்வதற்கு நாம் அனுமதிப்போம். தண்டனைக்கு அவர்கள் தகுதியானவுடன், நாம் அதனை முற்றிலுமாக அழிக்கின்றோம்.
[17:17] நோவாவிற்குப் பின்னர் பல தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம். தன் அடியார்களின் பாவங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் உமது இரட்சகர் மிகத்திறன் வாய்ந்தவர்; அவர் முற்றிலும் நன்கறிந்தவர், பார்ப்பவர்.

இவ்வுலகில் உங்கள் முன்னுரிமைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள்

[17:18] எவர் ஒருவர் இந்த விரைந்தோடும் வாழ்வைத் தனது முன்னுரிமையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றாரோ, அவருக்கு நாம் கொடுக்கத் தீர்மானித்தவற்றை அவரிடம் விரையச் செய்வோம், பின்னர் அவரை ஜஹன்னாவிடம் ஒப்படைத்து விடுவோம், அங்கே அவர் இழிவடைந்தவராகவும், மேலும் தோற்கடிக்கப் பட்டவராகவும் நிரந்தரமாகத் துன்பப்படுவார்.

மறுவுலகம்

[17:19] மறுவுலகைத் தனது முன்னுரிமையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, மேலும் நம்பிக்கை கொண்ட நிலையில், நன்னெறிகள் புரிவோரைப் பொறுத்தவரை, அவர்களுடைய முயற்சிகள் பாராட்டப்படும்.
[17:20] அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் வழங்குகின்றோம்; அவர்களுக்கும் மற்றும் இவர்களுக்கும் உமது இரட்சகரின் தயாளத்தில் இருந்து நாம் வழங்குகின்றோம். உமது இரட்சகரின் தயாளம் தீர்ந்து போகாதது.
[17:21] சில மக்களை மற்றவர்களைவிட மேலாக (இவ்வுலகில்) நாம் எவ்வாறு தேர்ந்தெடுத்திருக் கின்றோம் என்பதைக் கவனித்துப் பார்ப்பீராக. மறுவுலகின் வேறுபாடுகள் மிகப்பெரிதானதும் மேலும் மிகவும் விசேஷமானதும் ஆகும்.

முக்கியக் கட்டளைகள்

[17:22] நிந்திக்கப்பட்டவராகவும் மேலும் அவமதிக்கப் பட்டவராகவும் நீர் ஆகிவிடாதிருக்கும் பொருட்டு, கடவுள்-உடன் வேறு எந்தத் தெய்வத்தையும் நீர் அமைத்துக் கொள்ள வேண்டாம்.
[17:23] அவரை அன்றி நீர் வழிபடக்கூடாதெனவும், மேலும் உமது பெற்றோர்கள் கண்ணியப்படுத்தப் பட வேண்டுமெனவும் உமது இரட்சகர் விதித்துள்ளார். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உயிரோடிருக்கும் வரை, அவர்களை நோக்கி நீர், “சே” (வெறுப்பைக் காட்டும் மிகச் சிறிய செய்கை) என்று ஒரு போதும் கூறிவிட வேண்டாம், அன்றி அவர்களிடத்தில் நீர் கூச்சலிடவும் வேண்டாம்; நீர் அவர்களை இணக்கத்துடன் நடத்திட வேண்டும்.
[17:24] மேலும் பணிவு மற்றும் கனிவின் இறக்கைகளை அவர்களுக்காகத் தாழ்த்திக் கொள்ளும், மேலும், “என் இரட்சகரே, அவர்கள் மீது கருணை கொள்வீராக, ஏனெனில் அவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்து என்னை வளர்த்து வந்தனர்” என்று கூறுவீராக.
[17:25] உங்கள் இரட்சகர் உங்களுடைய ஆழ்மனதின் எண்ணங்களை முற்றிலும் அறிந்திருக்கின்றார். நீங்கள் நன்னெறிகளைக் கடைப்பிடித்து வந்தால், வருந்தித்திருந்துகின்றவர்களை அவர் மன்னிப் பவராக இருக்கின்றார்.
[17:26] உறவினர்களுக்கும், தேவையுடையவர்களுக்கும், ஏழைகளுக்கும், மற்றும் அந்நிய வழிப்போக்கர் களுக்கும், உரிய தர்மத்தை நீங்கள் கொடுக்க வேண்டும், ஆனால் மிதமிஞ்சியும், ஊதாரித்தன மாகவும் இருக்கக்கூடாது.
[17:27] ஊதாரிகள் சாத்தானின் சகோதரர்கள் ஆவர், மேலும் சாத்தானோ தன் இரட்சகருக்கு நன்றி கெட்டவன் ஆவான்.
[17:28] உமது இரட்சகரின் கருணையை நீர் தேடியவராக இருக்கும்போது, அவர்களிடமிருந்து நீர் திரும்பிக்கொள்ள நேர்ந்தாலும், மிக நல்ல முறையில் நீங்கள் அவர்களை நடத்திட வேண்டும்.

கஞ்சத்தனம் தண்டனைக்குரியதென்று அறிவிக்கப்பட்டுள்ளது

[17:29] நீங்கள் நிந்திக்கப்பட்டவராகவும் மேலும் வருத்தப்பட்டவராகவும் முடிந்துவிடாதிருக்கும் பொருட்டு, கஞ்சத்தனமாக உங்கள் கரங்களை உங்களுடைய கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டாம், அன்றி மூடத்தனமாக அதனைத் திறந்து விட்டு விடவும் வேண்டாம்.
[17:30] ஏனெனில் தான் தேர்ந்தெடுக்கின்ற எவரொரு வருக்கும் உமது இரட்சகர் வாழ்வாதாரங்களை அதிகரிக்கின்றார், மேலும் அதனைக் குறைக் கவும் செய்கின்றார். தன் படைப்புகளை அவர் முற்றிலும் நன்கறிந்தவர், பார்ப்பவர்.

கருக்கலைப்பு செய்தல் கொலையே ஆகும்

[17:31] வறுமையின் அச்சத்தினால் உங்கள் குழந்தை களை நீங்கள் கொலை செய்ய வேண்டாம். அவர்களுக்கும், அத்துடன் உங்களுக்கும் நாமே வழங்குகின்றோம். அவர்களைக் கொல்வது மிகப்பெரும் குற்றமாகும்.
[17:32] நீங்கள் விபச்சாரம் செய்ய வேண்டாம்; அது மிகப்பெரியதொரு பாவம், மேலும் கெட்டதொரு நடத்தையும் ஆகும்.
[17:33] நீதியின் பாதையிலேயே தவிர-எந்த ஒரு மனிதரையும் நீங்கள் கொலை செய்ய வேண்டாம்-ஏனெனில் கடவுள் உயிர்களைப் புனிதமானதாக ஆக்கியிருக்கின்றார். அநீத மாக ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டால், அப்போது நாம் அவருடைய வாரிசிற்கு நீதியை நிறைவேற்றும் அதிகாரத்தைத் தருகின்றோம். இவ்வாறாக, கொலைக்குப் பழி தீர்ப்பதில் வரம்புகளை அவர் மீற வேண்டாம், அவர் உதவி செய்யப்பட்டவராக இருப்பார்.
[17:34] அநாதைகளின் பணத்தை அவர்கள் பக்கு வத்தை அடையும் வரை அவர்களுடைய சொந்த நலனிற்காகவே தவிர, நீங்கள் தொட வேண்டாம். உங்களுடைய உடன்படிக்கைகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும், ஏனெனில் ஓர் உடன்படிக்கை என்பது மிகப்பெரிய ஒரு பொறுப்பு ஆகும்.
[17:35] நீங்கள் வணிகம் செய்யும்போது அளவை நிறைவாகக் கொடுக்கவும், மேலும் நியாயமாக எடைபோடவும் வேண்டும். இதுவே மேலானதும் நன்னெறி மிகுந்ததும் ஆகும்.

முக்கியமான உபதேசம்

[17:36] உங்களுக்காக நீங்களே சரிபார்த்துக் கொண்டாலே அன்றி, எந்தத் தகவலையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம். நான் உங்களுக்குக் கேட்கும் திறனையும், கண் பார்வையையும், மேலும் மூளையையும் வழங்கியுள்ளேன், மேலும் அதனைப் பயன் படுத்துவதற்கு நீங்கள் பொறுப்பாவீர்கள்.
[17:37] பூமியின் மீது நீங்கள் கர்வத்துடன் நடக்க வேண்டாம் -பூமியின் ஊடே நீங்கள் துளைபோட்டு விட முடியாது, அன்றியும் மலையைப் போல் உயர்ந்து விடவும் முடியாது.
[17:38] கெட்ட நடத்தைகள் அனைத்தும் உமது இரட்சகரால் தண்டனைக்குரியதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குர்ஆன்தான் ஞானம்

[17:39] இது உமது இரட்சகர் உமக்கு உள்ளுணர்வூட்டிய ஞானத்தில் சில ஆகும். நிந்திக்கப்பட்டவராகவும் மேலும் தோற்கடிக்கப்பட்டவராகவும், ஜஹன்னாவை நீர் அடைந்துவிடாதிருக்கும் பொருட்டு, கடவுள்-உடன் மற்றொரு தெய்வத்தை நீர் அமைத்துக் கொள்ள வேண்டாம்.
[17:40] உங்கள் இரட்சகர் வானவர்களைத் தனக்கு மகள்களாகத் தந்து கொண்டு, அதே சமயம் உங்களுக்கு மகன்களைத் தந்து விட்டாரா?! இத்தகையதொரு இறைநிந்தனையை எப்படி நீங்கள் கூறலாம்?
[17:41] அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இந்த குர்ஆனில் (எல்லாவிதமான உதாரணங்களையும்) நாம் எடுத்துரைத் திருக்கின்றோம். ஆனால் அது அவர்களுடைய வெறுப்பைத்தான் அதிகரிக்கின்றது.
[17:42] “அவர்கள் கூறுவதைப்போல், மற்றெந்தத் தெய்வங்களேனும் அவருடன் இருந்திருந்தால், அவர்கள் அரியாசனத்தின் உடைமையாளரை வெற்றி கொள்ள முயன்றிருப்பார்கள்” என்று கூறுவீராக.
[17:43] அவர் துதிப்பிற்குரியவர், அவர்களுடைய கூற்றுக்களுக்கு அப்பாற்பட்டு, அவர் மிக மிக உயர்வானவர்.

அனைத்தும் கடவுளைத் துதிக்கின்றது

[17:44] ஏழு பிரபஞ்சங்களும், பூமியும், இன்னும் அவற்றிலுள்ள ஒவ்வொன்றும் அவரைத் துதிக்கின்றன. அவரைத் துதிக்காத எதுவும் அங்கில்லை, ஆனால் அவைகளின் துதிப்பை நீங்கள் புரிந்து கொள்வதில்லை. அவர் கனிவானவர், மன்னிப்பவர்.

நம்ப மறுப்பவர்கள் குர்ஆனைப் புரிந்து கொள்ள முடியாது

[17:45] நீர் குர்ஆனை படிக்கும் போது, உமக்கும் மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளா தோருக்கும் இடையில் காணமுடியாததொரு தடையை நாம் அமைத்து விடுகின்றோம்.

குர்ஆன்: ஒரே மார்க்க ஆதாரம்

[17:46] அவர்கள் அதனைப் புரிந்து கொள்வதை விட்டுத் தடுப்பதற்காக, அவர்களுடைய மனங்களைச் சுற்றிக் கவசங்களையும், அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தனத்தையும் நாம் அமைத்து விடுகின்றோம். மேலும் குர்ஆனை மட்டும்* பயன்படுத்தி, உமது இரட்சகரைப்பற்றி நீர் உபதேசித்தால், அவர்கள் வெறுப்பினால் வெருண்டோடி விடுகின்றனர்.
அடிகுறிப்பு

[17:47] அவர்கள் உம்மை கவனமாகக் கேட்கும் போது, அவர்கள் செவியேற்பது என்ன என்பதை நாம் நன்கறிகின்றோம், மேலும் அவர்கள் இரகசிய மாகச் சதியாலோசனை செய்யும் போது- நம்ப மறுப்பவர்கள், “ நீங்கள் புத்தி சுவாதீனமற்ற ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள்” என்று கூறுகின்றனர்.
[17:48] அவர்கள் உம்மை வர்ணிக்கின்றனர் என்பதையும், மேலும் இது எவ்வாறு அவர்களைப் பாதையிலிருந்து வழிதவறச் செய்கின்றது என்பதையும் கவனித்துப் பார்ப்பீராக.
[17:49] அவர்கள், “ எலும்புகளாகவும், துகள்களாகவும் நாம் மாறிவிட்ட பின்னர், புதிதாக நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவோமா?!” என்று கூறினார்கள்.
[17:50] கூறுவீராக, “நீங்கள் பாறைகளாகவோ அல்லது இரும்பாகவோ மாறி விட்ட போதிலும்.
[17:51] “ சாத்தியமற்றது என்று நீங்கள் கருதும் எந்த வகைப் படைப்பாக நீங்கள் மாறி விட்ட போதிலும்.” அப்போது அவர்கள், “ யார் நம்மைத் திரும்பக் கொண்டு வருவார்?” என்று கூறுவார்கள். “முதல் தடவை உங்களைப் படைத்தாரே அந்த ஒருவர்” என்று கூறுவீராக. பின்னர் அவர்கள் தங்கள் தலைகளை ஆட்டியவாறு, “ அது எப்போது நிகழும்?” என்று கூறுவார்கள். “ அது நீங்கள் நினைப்பதை விடவும் அருகில் இருக்கக்கூடும்“ என்று கூறுவீராக.
[17:52] அவர் உங்களை வரவழைக்கும் அந்நாளில், அவரைப் புகழ்வதன் மூலம் நீங்கள் மறுமொழி யளிப்பீர்கள், மேலும் ஒரு குறுகிய காலம் தான் இந்த வாழ்வில் நீங்கள் நிலைத்திருந்தீர்கள் என்பதை அப்போது நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

ஒருவரை ஒருவர் இணக்கத்துடன் நடத்திக் கொள்ளுங்கள்

[17:53] ஒருவரை ஒருவர் இயன்றவரை மிகச்சிறப்பாக நடத்திக்கொள்ளும்படி என் அடியார்களிடம் கூறுவீராக, ஏனெனில் சாத்தான் எப்போதும் அவர்களுக்கிடையில் ஒரு பிளவை உண்டாக்க முயற்சிப்பான். நிச்சயமாக, சாத்தான் மனி தனுடைய மிகத் தீவிரமான விரோதியாவான்.
[17:54] உங்கள் இரட்சகர் உங்களை நன்கறிவார். அவருடைய அறிவிற்கேற்ப, உங்கள் மீது கருணையை அவர் பொழியலாம், அல்லது அவர் உங்களைப் பழி தீர்க்கவும் செய்யலாம். அவர் களுடைய வழக்கறிஞராக இருப்பதற்காக உம்மை நாம் அனுப்பவில்லை.
[17:55] உமது இரட்சகர் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொருவரையும் நன்கறிந்தவராக இருக்கின்றார். இந்த அறிவிற்கேற்ப, சில வேதம் வழங்கப்பட்டவர்களை மற்றவர்களை விட மேலாக நாம் தேர்ந்தெடுத்தோம். உதாரணத்திற்கு, டேவிட்டிற்கு நாம் சங்கீதத்தைக் கொடுத்தோம்.
[17:56] “அவருடன் நீங்கள் அமைத்துக் கொண்டிருக் கின்ற இணைத்தெய்வங்கள் எதனிடம் வேண்டு மானாலும் இறைஞ்சிப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்” என்று கூறுவீராக. உங்கள் துன்பங்களை நிவர்த்திக்கும் சக்தி எதுவும் அவர்களுக்கு இல்லை, அன்றி அவைகளால் அவற்றைத் தடுத்து விடவும் முடியாது.

இணைத்தெய்வங்களாக்கப்பட்ட நன்னெறியாளர்கள் கடவுளை மட்டுமே வழிபடுகின்றனர்

[17:57] அவர்கள் இறைஞ்சிப் பிரார்த்திக்கின்ற இணைத் தெய்வங்கள் கூட தங்களுடைய இரட்சகரின் பால் வழிகளையும் உபாயங்களையும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அவருடைய கருணைக் காக அவர்கள் பிரார்த்திக்கின்றனர், மேலும் அவருடைய தண்டனையை அஞ்சுகின்றனர். நிச்சயமாக, உமது இரட்சகரின் தண்டனை அச்சமூட்டுவதாகவே உள்ளது.
[17:58] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளுக்கு முன்னர் நம்மால் அழிக்கப்படாத, அல்லது கடும் தண்டனைக்கு அவர்களை உட்படுத்தாத எந்த ஒரு சமூகமும் இல்லை. இது முன்னரே புத்த கத்தில் எழுதப்பட்டுள்ளது.

பழைய வகையான அற்புதங்கள் நடைமுறையிலில்லாததாக ஆக்கப்பட்டுவிட்டன

[17:59] அற்புதங்களை அனுப்புவதிலிருந்து நம்மைத் தடுத்தது என்னவெனில், முந்திய தலை முறையினர் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர் என்பது தான். உதாரணமாக, தமூதிற்கு ஓர் ஒட்டகத்தை நாம் காட்டினோம், ஆழ்ந்த ஓர் (அற்புதம்), ஆனால் அவர்கள் அதற்கெதிராக வரம்பு மீறினர். பயபக்தியை ஊட்டுவதற்காக மட்டுமே நாம் அற்புதங்களை அனுப்பினோம்.
[17:60] உமது இரட்சகர் மனிதர்களை முற்றிலும் கட்டுப்படுத்துகின்றார் என்பதை உமக்கு நாம் தெரியப்படுத்தினோம், மேலும் நாம் உமக்குக் காட்டிய காட்சியையும்*, குர்ஆனில் சபிக்கப் பட்டுள்ள அந்த மரத்தையும் மனிதர்களுக்கு ஒரு சோதனையாக நாம் ஆக்கினோம். அவர்களுக்கு பயபக்தியை ஊட்டுவதற்காக உறுதியான சான்றுகளை அவர்களுக்கு நாம் காட்டினோம், ஆனால் இது அவர்களுடைய எதிர்ப்பைத்தான் அதிகரித்தது.
அடிகுறிப்பு

சாத்தான் மனிதர்களை ஏமாற்றுகின்றான்

[17:61] “ஆதாமின் முன் சிரம்பணியுங்கள்” என்று வானவர்களிடம் நாம் கூறிய போது, அவர்கள் சிரம் பணிந்தனர், சாத்தானைத் தவிர. அவன், “நீர் சேற்றால் படைத்த ஒருவருக்கு நான் சிரம்பணிய வேண்டுமா?” என்று கூறினான்.
[17:62] அவன், “எனக்கு மேலாக அவரை நீர் கௌரவப்படுத்தியதால், மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாள் வரை எனக்கு நீர் அவகாசம் அளிப்பீராயின், அவருடைய சந்ததியினர் அனைவரையும் நான் கைப்பற்றி விடுவேன், சிலரைத்தவிர” என்று கூறினான்.
[17:63] அவர் கூறினார், “அப்படியென்றால் சென்றுவிடு; நீயும் உன்னைப் பின்பற்றியவர்களும் உங்களுக் குரிய கூலியாக நரகத்தைச் சென்றடைவீர்கள்; ஒரு நியாயமான கூலி.
[17:64] “உனது குரலைக் கொண்டு நீ அவர்களை வசீகரிக்கலாம், மேலும் அவர்களுக்கெதிராக உனது படைபலம் அனைத்தையும் உனது ஆட்கள் அனைவரையும் ஒன்று திரட்டிக்கொள், மேலும் அவர்களுடைய பணத்திலும் மற்றும் பிள்ளைகளிலும் பங்குபெற்றுக் கொள், மேலும் அவர்களுக்கு வாக்குறுதி கொடு. சாத்தான் வாக்களிக்கும் எந்த ஒன்றும் ஒரு மாயையைக் காட்டிலும் அதிகம் எதுவுமில்லை.
[17:65] “எனது அடியார்களைப் பொறுத்தவரை, அவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை.” ஒரு பாதுகாவலராக உமது இரட்சகர் போதுமானவர்.
[17:66] உமது இரட்சகர்தான் அவருடைய அருட்கொ டைகளை நீங்கள் தேடிக்கொள்ளும் பொருட்டு, பெருங்கடலில்* கப்பல்களை மிதக்கும்படி செய்தவர். அவர் உங்கள் பால் மிக்க கருணை யாளராக இருக்கின்றார்.
அடிகுறிப்பு

கஷ்ட காலத்தில் நண்பர்கள்

[17:67] நடுக்கடலில் நீங்கள் கஷ்டத்தில் சிக்கிக் கொண்டால், நீங்கள் உங்களுடைய இணைத் தெய்வங்களை மறந்து விடுகின்றீர்கள், மேலும் கலப்பற்றவாறு அவரை மட்டுமே இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றீர்கள். ஆனால் அவர் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்து விட்ட உடன், நீங்கள் மீண்டும் உங்கள் பழைய நிலைக்குத் திரும்பி விடுகின்றீர்கள். உண்மையில், மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
[17:68] கரையின் மீது, நிலப்பரப்பு உங்களை விழுங்கிவிடும்படி அவர் செய்து விடமாட்டார் என்றோ?, அல்லது உங்கள் மீது ஒரு சூறைக்காற்றை அனுப்பி, பாதுகாப்பவர் எவரையும் நீங்கள் காணாதபடி அவர் ஆக்கிவிடமாட்டார் என்றோ நீங்கள் உத்தரவாதம் கொண்டிருக்கின்றீர்களா?
[17:69] இன்னொரு முறை அவர் உங்களைக் கடலுக்குத் திருப்பி, பின்னர் உங்களுடைய நம்பிக்கை யின்மையின் காரணமாக உங்களை மூழ்கடித்து விடக் கூடிய ஒரு புயல்காற்றை அனுப்பி விட மாட்டார் என்று நீங்கள் உத்தரவாதம் கொண்டிருக்கின்றீர்களா? இது நிகழ்ந்து விட்டால், மற்றுமொரு வாய்ப்பை உங்களுக்கு நாம் தர மாட்டோம்.
[17:70] ஆதாமின் சந்ததியினரை நாம் கௌரவப் படுத்தினோம், மேலும் கரையிலும் மற்றும் கடலிலும் அவர்களுக்கு சவாரிகளை வழங்கினோம். நல்ல வாழ்வாதாரங்களை அவர்களுக்கு நாம் வழங்கினோம், மேலும் நமது படைப்பினங்கள் பலவற்றை விட அவர்களுக்கு மிகப்பெரும் மேன்மைகளைத் தந்தோம்.
[17:71] ஒவ்வொரு சமூகத்தினரையும், அவர்களுடைய பதிவேடுகளுடன் நாம் வரவழைக்கும் அந்நாள் வரும். நன்னெறியின் பதிவேடு கொடுக்கப் பட்டோரைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் பதிவேடுகளைப் படிப்பார்கள் மேலும் சிறிதளவு அநீதியையும் அனுபவிக்க மாட்டார்கள்.
[17:72] இந்த வாழ்வில் குருடர்களாக இருந்தவர்களைப் பொறுத்தவரை, மறுவுலகிலும் அவர்கள் குருடர்களாகவே இருப்பார்கள்; அதை விடவும் மிக மோசமாக.

கடவுள் தூதரை பலப்படுத்துகின்றார்

[17:73] நாம் உமக்குக் கொடுத்த வெளிப்பாடுகளை விட்டு அவர்கள் உம்மைக் கிட்டத்தட்டத் திருப்பி விட்டனர். உம்மை ஒரு நண்பராகக் கருதிக் கொள்வதற்காக, வேறு எதையாவது நீர் இட்டுக் கட்டிக் கூற வேண்டுமென்று அவர்கள் விரும்பினர்.
[17:74] உம்மை நாம் பலப்படுத்தி இருக்காவிட்டால், நீர் கிட்டத்தட்ட சிறிதேனும் அவர்கள் பக்கம் சாய்ந்திருப்பீர்.
[17:75] அதனை நீர் செய்திருந்தால், இந்த வாழ்விலும், மேலும் மரணத்திற்குப் பின்னரும் உமது தண்டனையை நாம் இருமடங்காக ஆக்கியிருப் போம், மேலும் நமக்கெதிராக உமக்கு உதவி செய்ய எவர் ஒருவரையும் நீர் கண்டிருக்க மாட்டீர்.
[17:76] உம்மைவிட்டு நீங்கிக் கொள்வதற்காக, உம்மை நாட்டைவிட்டு கிட்டத்தட்ட அவர்கள் வெளி யேற்றி விட்டனர், அவ்வாறு நீர் விலகிச் சென்றவுடன் அவர்கள் தங்களுடைய பழைய நிலைக்குத் திரும்பிவிட இயலும் என்பதற்காக.
[17:77] உமக்கு முன்னர் நாம் அனுப்பிய அனைத்துத் தூதர்களுக்கும், இந்த நிலைதான் தவறாது இருந்து வந்தது, மேலும் நமது வழிமுறை ஒருபோதும் மாறுவதில்லை என்பதை நீர் கண்டு கொள்வீர்.

நண்பகல் தொழுகை

[17:78] நண்பகலில் சூரியன் அதன் உச்சியிலிருந்து சாய்ந்து அஸ்தமனத்தை நோக்கி அது நகரும் பொழுது நீர் தொடர்புத் தொழுகையைக் (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும். இன்னும் அதிகாலை யில் நீங்கள் குர்ஆன் (ஓதுதலை) கடைப் பிடிக்கவும் வேண்டும். அதிகாலையில் குர்ஆன் (ஓதுதல்) சாட்சி அளிக்கின்றது.

தியானம்

[17:79] மேலதிகமான நன்மைக்காக, உமது இரட்சகர் ஒரு கௌரவமான அந்தஸ்திற்கு உம்மை உயர்த்தக் கூடும் என்பதற்காக, இரவுப் பொழுதில் நீர் தியானம் செய்ய வேண்டும்.
[17:80] மேலும், “ என் இரட்சகரே, கௌரவமானதொரு நுழைவிற்குள் என்னை அனுமதிப்பீராக, மேலும் கௌரவமானதொரு புறப்பாட்டுடன் என்னைப் புறப்பட அனுமதிப்பீராக, மேலும் உம்மிடமிருந்து சக்திமிக்கதொரு ஆதரவை எனக்கு வழங்குவீராக” என்று கூறுவீராக.
[17:81] “சத்தியம் வென்றுவிட்டது, மேலும் அசத்தியம் மறைந்துவிட்டது; தவிர்த்துவிட முடியாதவாறு அசத்தியம் மறைந்தே போகும்,” என்று பிரகடனப்படுத்துவீராக.

நிவாரணமும் கருணையும்

[17:82] நம்பிக்கை கொண்டோருக்கு நிவாரணத்தையும் மற்றும் கருணையையும் இந்தக் குர்ஆனில் நாம் இறக்கி அனுப்புகின்றோம். அதே சமயம், வரம்பு மீறுபவர்களின் அக்கிரமத்தைத்தான் இது அதிகரிக்கின்றது.
[17:83] மனிதனுக்கு நாம் அருள்பாலிக்கும்போது, அவன் வெவ்வேறு எண்ணங்களில் மூழ்கியவனாகவும், மேலும் கவனமற்றவனாகவும் ஆகிவிடு கின்றான். ஆனால் துன்பம் அவனைத் தாக்கும் போது, அவன் மனச் சோர்வடைந்தவனாக மாறிவிடுகின்றான்.
[17:84] “ஒவ்வொருவரும் தனது நம்பிக்கைக்கு ஏற்பவே செயல்படுகின்றார், மேலும் சரியான பாதையில் வழிநடத்தப்பட்டவர் எவர் என்பதை உங்கள் இரட்சகர் நன்கறிவார்” என்று கூறுவீராக.

இறைவெளிப்பாடு: அனைத்து அறிவின் மூலாதாரம்

[17:85] வெளிப்பாடுகளைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். கூறும், “ இந்த வெளிப்பாடு என் இரட்சகரிடமிருந்து வருகின்றது. உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவு சொற்ப மேயாகும்.”
[17:86] நாம் நாடினால், உமக்கு நாம் வெளிப் படுத்தியவற்றை நம்மால் திருப்பி எடுத்துக் கொள்ள இயலும், பின்னர் நமக்கெதிராகப் பாதுகாவலர் எவரையும் நீர் காணமாட்டீர்.
[17:87] இது உம் இரட்சகரிடமிருந்து கருணையே அன்றி வேறில்லை. உம்மீதான அவருடைய அருட் கொடைகள் மிகப்பெரியதாக உள்ளன.

குர் ஆனுடைய கணிதக் கட்டமைப்பு

[17:88] “ எல்லா மனிதர்களும், மற்றும் எல்லா ஜின்களும் இதுபோன்ற ஒரு குர்ஆனைக் கொண்டு வருவதற்காக ஒன்று சேர்ந்தாலும், இதைப் போன்ற எதையும் அவர்களால் ஒரு போதும் கொண்டு வர முடியாது, அவர்கள் ஒருவர் மற்றொருவருக்கு எவ்வளவு உதவிகள் அளித்துக் கொண்டாலும் அது பொருட்டல்ல” என்று கூறுவீராக.
[17:89] இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்காக நாம் எல்லா விதமான உதாரணங்களையும் எடுத்துரைத் திருக்கின்றோம், ஆனால் பெரும்பாலான மனிதர்கள் நம்ப மறுத்தலையே வலியுறுத்து கின்றனர்.

கடவுளின் தூதர்கள் சவால் விடப்பட்டனர்

[17:90] அவர்கள் கூறினர், “பூமியிலிருந்து ஒரு நீரூற்றைப் பொங்கி வரும்படி நீர் செய்தாலன்றி உம்மை நாங்கள் நம்ப மாட்டோம்.
[17:91] “அல்லது ஆறுகள் அதன் ஊடே ஓடக்கூடிய, பேரீச்சை மற்றும் திராட்சைகள் கொண்ட ஒரு தோட்டத்தை நீர் சொந்தமாகக் கொண்டிருந்தால் அன்றி.
[17:92] “அல்லது நீர் கூறிய வண்ணம், விண்ணிலிருந்து துண்டங்களை, எங்கள் மீது நீர் விழச் செய்தாலன்றி. அல்லது கடவுள்-ஐயும் மற்றும் வானவர்களையும் எங்கள் கண்களின் முன்னால் கொண்டு வந்தாலன்றி.
[17:93] “அல்லது ஆடம்பரமானதோர் மாளிகையை நீர் சொந்தமாகக் கொண்டிருந்தாலன்றி, அல்லது வானத்தினுள் நீர் ஏறிச் சென்றாலன்றி. அவ்வாறு நீர் ஏறிய போதிலும், நாங்கள் படிக்கக் கூடிய ஒரு புத்தகத்தை நீர் கொண்டு வந்தாலன்றி நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.” * “என் இரட்சகர் துதிப்பிற்குரியவர். நான் ஒரு மனிதத் தூதர் என்பதை விட அதிகமாக எதுவும் ஆவேனா?” என்று கூறுவீராக.
அடிகுறிப்பு

தூதுத்துவம்: ஒரு முக்கியமான சோதனை

[17:94] வழிகாட்டல் அவர்களிடம் வந்தபோது நம்பிக்கை கொள்வதிலிருந்து மனிதர்களைத் தடுத்தது என்னவென்றால், “ ஒரு மனிதரைத்தான் கடவுள் தூதராக அனுப்பினாரா?” என்று அவர்கள் கூறுவது தான்.
[17:95] “வானவர்கள் வசிக்கக் கூடியதாக பூமி இருந் திருந்தால், வானவரான ஒரு தூதரை விண்ணி லிருந்து நாம் அவர்களுக்கு இறக்கி அனுப்பி யிருப்போம்” என்று கூறுவீராக.

கடவுள்தான் எனது சாட்சி

[17:96] “எனக்கும், உங்களுக்கும் இடையில் ஒரு சாட்சியாக கடவுள் போதுமானவர். அவரை வழிபடுபவர்களை அவர் முற்றிலும் நன்கறிந்தவர், பார்ப்பவர்” என்று கூறுவீராக.
[17:97] எவரொருவரைக் கடவுள் வழிநடத்துகின்றாரோ, அவர்தான் உண்மையில் வழிநடத்தப்பட்டவர் ஆவார். மேலும் எவரையெல்லாம் அவர் வழிகேட்டில் அனுப்பிவிடுகின்றாரோ, அவர் களுக்கு அவரையன்றி எந்த இரட்சகர்களையும் மேலும் எஜமானர்களையும் நீர் ஒருபோதும் காணமாட்டீர். மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் வலுக்கட்டாயமாக அவர்களை நாம் ஒன்று கூட்டுவோம்; குருடர்கள், ஊமைகள், மேலும் செவிடர்கள், அவர்கள் சேருமிடம் நரகமேயாகும். அதன் சூடு தணியும் போதெல்லாம், அவர்களுடைய நெருப்பை நாம் அதிகரிப்போம்.

அவர்களுடைய ஆழ்மனதின் எண்ணங்கள்

[17:98] நமது வெளிப்பாடுகளை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததால், அவர்களுக்குரிய நியாயமான தண்டனை இத்தகையதேயாகும். அவர்கள், “ எலும்புகளாகவும், துகள்களாகவும் நாம் மாறிய பின்னர், புதியதொரு படைப்பாக நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவோமா?” என்று கூறினார்கள்.
[17:99] வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த அந்தக் கடவுள் அதே போன்ற படைப்புகளைப் படைக்கும் திறனுடையவர் என்பதை அவர்களால் காண முடியவில்லையா? மாற்றமுடியாததொரு வாழ்க்கைத் தவணையை அவர்களுக்காக அவர் முன்னரே தீர்மானித்திருக்கின்றார்? இருப் பினும், நம்ப மறுப்பவர்கள் நம்ப மறுத்தலையே வலியுறுத்துகின்றனர்.
[17:100] “என்னுடைய இரட்சகரின் கருணைப் பொக்கிஷங்களையே நீங்கள் சொந்தமாகக் கொண்டிருந்தாலும், அவற்றை நீங்கள் செல வழித்து விடக்கூடும் என்று அஞ்சி, நீங்கள் அவற்றை நிறுத்திக் கொண்டிருப்பீர்கள். மனிதப் படைப்பு கஞ்சத்தனம் கொண்டதாக இருக்கின்றது” என்று பிரகடனம் செய்வீராக.

மோஸஸும் ஃபேரோவும்

[17:101] ஒன்பது ஆழ்ந்த அற்புதங்கள் கொண்டு மோஸஸிற்கு நாம் ஆதரவளித்தோம் - இஸ்ரவேலின் சந்ததியினரைக் கேட்டுக் கொள் ளுங்கள். அவர்களிடம் அவர் சென்ற போது, ஃபேரோ அவரிடம், “ மோஸஸே, நீர் சூனியம் செய்யப்பட்டுவிட்டீர் என்று நான் நினைக் கின்றேன்“ என்று கூறினான்.
[17:102] அவர், “கண்கூடாக, வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகரைத் தவிர, எவராலும் இவற்றை இவ்வளவு தெளிவாகக்காட்ட இயலாது என்பதை நீ நன்கறிவாய். ஃபேரோவே, நீ அழிந்தாய் என்று நான் நினைக்கின்றேன்” என்று கூறினார்.
[17:103] அவன் அவர்களை நாட்டை விட்டு வெளியே துரத்தியவாறு, அவன் அவர்களை பின்தொடர்ந்த போது, அவன் பக்கம் இருந்தவர்களுடன் சேர்த்து அவனையும், அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.
[17:104] மேலும் அதன் பின்னர் இஸ்ரவேலின் சந்ததியினரிடம் நாம், “சென்று இந்த நாட்டில் வாழுங்கள். இறுதி முன்னறிவிப்பு நிகழ்ந்தேறும் போது, உங்கள் அனைவரையும் ஒரே கூட்டமாக நாம் ஒன்று கூட்டுவோம்” என்று கூறினோம்.

மனனம் செய்வதை எளிதாக்குவதற்காக குர்ஆன் மெதுவாக வெளிப்படுத்தப்பட்டது

[17:105] சத்தியம் நிறைந்ததாக, இதனை நாம் இறக்கினோம், மேலும் சத்தியத்துடனே இது இறங்கி வந்தது. நற்செய்தியைக் கொண்டு செல்லும் ஒருவராகவும், அத்துடன் எச்சரிப்பவராகவுமே அன்றி உம்மை நாம் அனுப்பவில்லை.
[17:106] ஒரே தடவையில் இது அனைத்தையும் நாம் கீழே இறக்கிய போதிலும், மனிதர்களுக்கு ஒரு நீண்ட காலம் நீர் இதனைப் படித்துக் காட்டுவதற்கு ஏற்ப, மெதுவாக நாம் வெளிப்படுத்திய ஒரு குர்ஆன்.
[17:107] “இதில் நம்பிக்கை கொள்ளுங்கள், அல்லது இதில் நம்பிக்கை கொள்ளாதிருங்கள்,” என்று பிரகடனம் செய்வீராக. முந்திய வேதங்களிலிருந்து அறிவைப் பெற்றவர்கள், அவர்களுக்கு இது ஓதிக்காட்டப்படும் போது, அவர்கள் சிரம் பணிந்தவர்களாக, அவர்களுடைய முகவாய்க் கட்டைகளின் மீது விழுகின்றனர்.
[17:108] அவர்கள், “எங்கள் இரட்சகர் துதிப்பிற்குரியவர். இது எங்கள் இரட்சகரின் முன்னறிவிப்பைப் பூர்த்தி செய்கின்றது” என்று கூறுவார்கள்.
[17:109] அவர்கள் சிரம் பணிந்தவர்களாகவும், மேலும் தேம்பியழுதவர்களாகவும் தங்கள் முகவாய்க் கட்டைகள் மீது கீழே விழுவார்கள். ஏனெனில் இது அவர்களுடைய பயபக்தியை அதிகரிக் கின்றது.

தொடர்புத் தொழுகைகளின் (ஸலாத்) தொனி

[17:110] “கடவுள் என அவரை அழையுங்கள், அல்லது மிக்க அருளாளர் என அவரை அழையுங்கள்; எந்தப் பெயரை நீங்கள் பயன்படுத்தினாலும், அழகிய பெயர்கள்தான் அவருக்குரியவை” என்று கூறுவீராக. உமது தொடர்புத் தொழுகைகளை(ஸலாத்) நீர் மிகவும் சப்தமாகவோ, அன்றி இரகசிய மாகவோ கூறவேண்டாம்; மிதமானதொரு தொனியைப் பயன்படுத்துவீராக.
[17:111] மேலும், “ புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது, அவர் ஒருபோதும் ஒரு மகனைப் பெற்றெடுக்க வில்லை, அன்றி அவருடைய சாம்ராஜ்யத்தில் அவருக்குப் பங்குதாரர்களும் இல்லை, அன்றி பலஹீனம் காரணமான கூட்டணி எதுவும் அவருக்குத் தேவையுமில்லை,” என்று பிரகடனம் செய்வீராக, மேலும் விடாது அவரைப் பெருமைப் படுத்துவீராக.